உலகில் உயர்ந்தது எது ?
ஞானம்.
ஞானம் என்றால் என்ன ?
இறைவனைத் தெளிவாக எண்ணுவது.
இதனால் என்ன லாபம் ?
காணாமல் போன விலை மதிப்பற்ற பொருளைத் தேடி எடுப்பது.
சரி விசயத்து வருவோம்.
கோயிலுக்குச் செல்லும் பலர் எண்ணத்தை இறைவன் மேல் வைப்பதில்லை. ஏதோ கடனுக்குத்தான் செல்லுகின்றனர். ஏன் கோயிலுக்குச் சென்றீர்கள் என்று கேட்டால் நேர்த்திக்கடன் என்று கூறிகின்றனர்.
இன்னும் சிலர் 'என் குழந்தைக்கு உடம்புக்குச் சரியில்லாதபோது இந்த கோயிலில் மொட்டை அடிக்க நினைத்தேன். அதுதான் இந்த நேர்த்திக்கடனைச் செலுத்த வந்தேன்' என்று கூறுகின்றனர்.
அடுத்து அடுத்து பலரை விசாரித்துப் பார்த்தால் தொழில் பிரச்சனைக்காக இறைவனிடம் வேண்டியவர்கள், வீடுகட்டி முடிய வேண்டும் என்று நினைத்தவர்கள். தன் குழந்தையின் கல்வி, வேலைக்காக இறைவனிடம் இரைஞ்சுபவர்கள்தான் இருக்கிறார்களே தவிர இறைவனை தன்னிடம் வரும்படி கோயிலில் வேண்டுபவர்கள் மிக மிக குறைவாகத்தான் காணப்படுகின்றனர். அச்சத்தால் இறைவனிடம் செல்பவர்களே அதிகம்.
அச்சம் அறியாமையிலிருந்துதான் பிறக்கிறது. எனவே அறியாமையை முதலில் நீக்க வேண்டும்.
நல்ல கருத்துக்கள், நல்லவர்கள் வாயிலாக வரும்போது இழந்த பொருள் மீண்டும் வந்துவிட்டதாக நினைத்து மூளையில் பதிவு செய்து கொள்பவரே மனிதரில் சிறந்தவர்.
மூடனைப் பிறர் அழிக்க வேண்டியதில்லை. தன் எண்ணம் சரியில்லாததால் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அறிவாளி தன் எண்ணத்தை இறைவன்மேல் செலுத்தி உயர்ந்துவிடுகிறான்.
அறிவற்றமுட்டாள் மவுன விரதம் இருந்தால் மட்டும் இறைவனை அறிய முடியாது. ஏனென்றால் அவன் மவுனத்தில் எண்ண அலைவரிசை வெளியில் செல்கிறது. அது இறைவனிடம் செல்லவில்லை.
எண்ணம் எப்பொழுதும் உலக விசயங்களில் செல்வது மனித இயல்புதான் அதை அவ்வப்போது அணைபோட்டுத் திருப்பி இறைவன்பக்கம் கொண்டுவர முயற்சிப்பவரே பிறவியை ஜெயிப்பவர்.
நமது எண்ணம் இறைபக்கம் இருக்குமேயானால் கண்டிப்பாக தெளிவான பேச்சு, உணர்ந்த செயல், மறுமைக்கான உழைப்பு, செல்வத்தில் ஆரோக்கியம், தன்நிறைவு, எதிலும் பற்று இல்லாது இறைபற்றுடன் வாழலாம்.
மகிழ்ச்சியில் அனுதினமும் இறைவனை எண்ணி நினைப்பவரே மனிதரில் மிகச் சிறந்தவர். துன்பத்தில் இறை நினைப்பு சிறிது வருவது இயல்பு. ஆனால் இந்த நேரத்தில் பக்தியை அதிகப்படுத்த முயல்பவர் இரட்டிப்பு வெற்றியை அடைவர்.
துன்பத்தில் இறை நினைப்பு வரும். ஆனால் திடீரென அந்தத் துன்பத்திலேயே எண்ணம் செல்லுமே தவிர இறைவன் மேல் பற்று வைப்பது குறைந்துவிடும். இதைக் கவனித்து எண்ணத்தை இறைவன் பக்கம் கொண்டு செல்வது பக்தனின் கடமையாகும்.
இறைவன்மேல் எண்ணத்தை நிலைநிறுத்தத்தான் கோயில் கட்டப்பட்டது. இறைவன் யார் என்ற கேள்விக்குறி அநேகருக்கும் இருக்கும்.
ஆனால் கோயில் என்ற அழகான கட்டிடத்தை உங்கள் உள்ளம் பதிய வைத்துக் கொள்ளும், எந்தக் கோயில் சூழ்நிலை உங்கள் மனதிற்குப் பிடிக்கிறதோ அந்தக் கோயிலை நினைத்தவுடன் உணர்வுப்பூர்வமாக உங்களால் பார்க்க முடியும்.
இப்பொழுது உங்கள் எண்ண அலைவரிசையை தூண்டினால் நீங்கள் அந்த கோயிலில் உலாவலாம். அங்கு உள்ளே சென்று இறைவனைத் தரிசிக்கலாம். இந்த நிகழ்ச்சி எங்கு நடக்கிறது என்றால் உங்கள் மூளையில், இந்த ஒளிபரப்பை எண்ணம்தான் துவக்குகிறது. எண்ணம் சிறப்பானால் எல்லாமே கைகூடும். இதனால் எண்ணத்தை அடிக்கடி இறைவன் பக்கமே கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்.
மனம்தான் நமது கேமராமேன், எண்ணம்தான் கேமரா, இப்பொழுது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் சென்ற கோயிலை எண்ணம் என்ற கேமரா வாயிலாக படம் எடுத்துவிட்டீர்கள்.
சரி இப்போது வீட்டிற்கு வந்துவிட்டீர்கள், எண்ணத்தால் எடுக்கப்பட்ட வீடியோவை VCDயில் போட்டுப் பாருங்கள், அப்படியே ரசித்துப் பார்க்க உங்களால் முடியும்.
உங்களால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை. ஆனால் உங்கள் எண்ணத்தை அதில் செலுத்துவதில்லை. உலகில் உயர்ந்த பொருள் இறைவன் என்பதை அறியாததுதான் இதற்கு காரணம்.
எதார்த்தவாதிக்கு எதுவும் வெற்றியில்லை. காரியவாதிக்கு இம்மையும், மறுமையும் வெற்றி.
'நண்பன், பகைவன், நல்லவன், கெட்டவன், மானம், அவமானம், இகழ்ச்சி, புகழ்ச்சி ஆகியவற்றையெல்லாம் ஒரே மாதியான உணர்ச்சியுடன் எண்ணுபவனும், ஆசைகளை விலக்கி, தனது கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு, தனது திறமையை முன்வைத்து என்னை அனுதினமும் எண்ணி வாழ்பவர்கள் எனக்கு இனிமையானவர்களாகும்' என்று பரமகுரு பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறகிறார்.
|